‘கொலாம்பஸ், கொலாம்பஸ், விட்டாச்சு லீவு!’ என்ற பாடலை மலர்ந்த முகத்துடன் முணுமுணுத்துக்கொண்டு இருந்தான் பாலன். இதைக் கண்ட அவன் நண்பன் முகிலன், “என்ன நண்பா! சூரியனைக் கண்ட தாமரையைப் போல் இருக்கிறாய்!” என்று கூறி அவனுடைய மகிழ்ச்சிக்குக் காரணத்தைக் கேட்டான்.
“நான் என் வாழ்க்கையிலே மீன்பிடிப்பயணத்திற்குப் போனதே இல்லை. இதுதான் என் முதல் அனுபவம்,” என்று பாலன் மகிழ்ச்சியுடன் பதிலளித்தான். இதைக் கேட்ட முகிலன் அதிர்ச்சி அடைந்தான். அவன் முகத்தில் கலவரம் தோன்றியது. “என்ன! நீ இதுவரை மீன்பிடிப்பயணத்திற்கு வந்ததில்லையா? நீ இரண்டு அல்லது மூன்று தடவைக்கு மேல் வந்திருக்கிறாய் என்றல்லவா நான் நினைத்தேன்,” என்று பயத்துடன் முகிலன் கூறினான். “அதற்கென்ன இப்பொழுது?” என்று கேட்டுவிட்டு மீன் பிடிக்கத் தொடங்கினான் பாலன். பிறகு இருவரும் தங்கள் தூண்டில்களைக் கடலில் இட்டு, சிறிது நேரம் உறக்கத்தில் ஆழ்ந்தனர். மாலை ஐந்து மணிக்குக் கண் விழித்த முகிலன் பாலனை எழுப்பி, “நண்பா! இருட்டுவதற்கு முன் நாம் வீட்டுக்குச் செல்லவேண்டும். அதுமட்டுமல்ல, கடல் கொந்தளிப்பாக இருக்கிறது!” என்று பயத்துடன் கூறினான்.
திடீரென்று பாலனின் தூண்டில் கனத்தது. தன் ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல் தன் பலத்தை எல்லாம் திரட்டிக் கொண்டு இழுத்த பாலனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்திருந்தது. அவன் தூண்டிலில் ஒரு பெரிய மீன் அகப்பட்டுக்கொண்டதைப் பார்த்தான். இதைப் பிடித்த பிறகு இருவரும் தங்களையே மறந்து மீன்கள் பிடிப்பதில் கவனம் செலுத்தினர்.
பொழுது சாயத் தொடங்கியது. அவர்கள் வீட்டிற்குச் செல்ல முடிவு செய்தனர். பாலன் தன் படகின் இஞ்சினை இயக்கினான். ஆனால் படகு நகர மறுத்தது. பீதியால் அவர்களின் கண்கள் அகல விரிந்தன. திடீரென்று அவர்கள் ஒரு கப்பலைப் பார்த்தார்கள். அவர்களின் கூக்குரல் அந்தக் கப்பலுக்கும் அவர்களுக்கும் இருந்த இடைவெளியைக் கிழித்துக்கொண்டு சென்றது. அவர்கள் தங்கள் கைகளை அசைத்து அந்த மாலுமிகளின் கவனத்தை ஈர்க்க முயன்றனர். அந்தக் கப்பலில் உள்ள மாலுமிகள் முகிலனையும் பாலனையும் காப்பாற்றினர். முகிலனும் பாலனும் ஆனந்தக்கண்ணீர் சிந்தி நன்றி கூறினர். |