“திட்டமிடுதல் சரியாகயிருந்தால் வெற்றிக் கனியைப் பறிப்பது உறுதி”, என்ற மந்திரவார்த்தைகளை இன்றைய ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வருவது போல அன்றைய மன்னர்களும் கடைப்பிடித்து வந்தனர். அவர்களில் ஒருவர் தான் ‘ஜூலியஸ் சீசர்’.
ரோமானிய சக்கரவர்த்தியாக விளங்கிய சீசர் இங்கிலாந்தின் மீது போர் தொடுக்க விரும்பினார். படையும் திரட்டிச் சென்றார். ஆனால், பல போர்களில் வெற்றி பெற்ற படைவீரர்களோ போரிடுவதில் ஆர்வமின்றியிருந்தனர். இப்படியிருந்தால் போரில் தோல்வியை மட்டுமே தழுவ முடியும் என்பதை ஜூலியஸ் சீசர் உணர்ந்தார். ஆனால், சீசரோ இங்கிலாந்தை வென்றேயாக வேண்டும்; தம் படைவீரர்களால் நிச்சயமாகப் போரில் வெற்றி வாகை சூட முடியும் என்று நம்பினார். தனது போர் வீரர்களுக்கு வேண்டியதெல்லாம் போரிடவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என்பதை உணர்ந்தார். ஆகவே அந்த எண்ணத்தைத் தூண்ட என்ன செய்யலாம் என்பதை யோசிக்கத் தொடங்கினார், ஜூலியஸ் சீசர்.
இறுதியில், போரிட ஆர்வமின்றிருக்கும் வீரர்களுக்கு ‘அதிர்ச்சி வைத்தியம்’ ஒன்றினைத் தர வேண்டும் என்று அவர் முடிவெடுத்தார். அந்த முடிவின்படி தாங்கள் பயணம் செய்து வந்த கப்பல்களைப் படைவீரர்கள் அறியாதவாறு அவர் தீயிட்டுக் கொளுத்தினார். போரிட விரும்பாத வீரர்களுக்கும் சரி; போரிட விரும்பிய வீரர்களுக்கும் சரி; இங்கிலாந்தை வெற்றி கண்டாலன்றி, ரோமானிய நாட்டிற்குத் திரும்ப முடியாத இக்கட்டான நிலையை அவர் ஏற்படுத்தினார்.
கப்பல்கள் எரிந்துவிட்டதை அறிந்த போர் வீரர்கள் எதுவும் செய்ய முடியாமல் திணறினர். இங்கிலாந்தை வெற்றி கண்டால் அன்றி தோற்றால் சீசர் உட்பட ஒருவர் கூட உயிருடன் திரும்ப முடியாது என்பதை உணர்ந்தனர். அப்படியே புறமுதுகு காட்டித் தப்பித்து ஓட எண்ணினாலோ, இங்கிலிஷ் கால்வாயைக் கடந்து செல்வது என்பது முடியாத காரியம் என்பதையும் புரிந்துகொண்டனர். ‘எப்படிப் பார்த்தாலும் இங்கிலாந்து நாட்டுப் போர்ப்படை வீரர்களை வென்றேயாக வேண்டும்’ என்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை உணர்ந்து போரிட தயாராயினர்.
சீசரின் திட்டம் வென்றது. ‘இங்கிலாந்தை வென்றால் சொந்த நாடு. தோற்றால் இங்கிலாந்து நாட்டில் கல்லறை’ என்ற நிலையில் போரில் தோல்வியையே கண்டறியாத ரோமானிய வீரர்கள் ஆவேசத்துடன் இங்கிலாந்துப் படையுடன் போரிட்டனர். வாழ்வா ? சாவா ? என்ற கேள்விக்குறியுடன் போரிட்டு இங்கிலாந்து படை வீரர்களைத் தோற்கடித்தனர்.
இங்கிலாந்து படைவீரர்கள் பயன்படுத்திய கப்பல்களைப் பறித்துக்கொண்டு ரோமானிய நாட்டிற்குத் திரும்பினார்கள்.
எதையும் வெற்றி கொள்ள திட்டமிடுதலிலும் தொடர்ந்து முடிப்பதிலும் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்பதில் ஜூலியஸ் சீசர் கைதேர்ந்தவராக விளங்கினார். அதனால் வெற்றியும் பெற்றார்.
‘செயல்முறைகள் செம்மையானால் செயல்கள் யாவும் வெற்றியாகும்’
|